Tuesday, March 19, 2013

படித்தேன் பகிர்கிறேன் - 1



படித்தேன் பகிர்கிறேன் - 1

நினைத்துப் பார்த்தால் வியப்பாகயிருக்கிறது. மாத சஞ்சிகைகளின் மூலம் தமிழ் மேலார்வம் ஏற்பட்ட எனக்கு, என் தாத்தா அறிமுகப்படுத்திய ‘சமணமும் தமிமும்’ என்ற பொத்தகம் என்னையே எனக்கு உணர்த்தியது என்று சொல்லலாம். அந்த நூலாசிரியரின் (மயிலை சீனி.வேங்கடசாமி) அவர்களின் தமிழாளுமையின் ஈர்பால், அவரின் பல நூல்களைத் தேடிப் படிக்க விழைந்தேன். அவரின் மூலம், தமிழுக்கு, தமிழ்ச் சமணர்களின் அரிய பங்களிப்பைத் தெரிந்துக் கொண்டேன். அவரின் எழுத்தின் மூலமே, சங்கத் தமிழின் அறிமுகமும் கிடைத்தது. அன்றுத் தொடர்ந்த தமிழார்வம் இன்றுவரை தொடர்கிறது. ஆனால் இவ்விடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட துறைபோகிய தமிழறிஞர்களின் இலக்கியத் தமிழ் என்னும் தீந்தமிழ், மாத ”சஞ்சிகைத் தமிழ்” என்னும் மயக்கத்திலிருந்து என்னை முற்றாக விடுவித்தது எனலாம்.

நினைத்துப் பார்த்தால் மலைப்பாகவும் இருக்கிறது. பொத்தக அலமாரியில் வைக்க இடம் போதவில்லை. பரண்மேலும் கட்டுகட்டாகப் பொத்தகங்கள். (ஆயிரம் நூல்களுக்கும் மேல்) டைரிக் குறிப்புகளின் நீளம் 12 டைரிகளையும் தாண்டியிருக்கிறது. படித்து என்ன பிரயோஜனம். படித்ததை பகிர வேணாமா? என்ற எண்ணத் தூண்டலினால் தோன்றியவையே, இங்கே ‘படித்தேன் பகிர்கிறேன்’ என்ற கட்டுரைத் தொடராக எழுத நினைக்கிறேன்.

(படித்ததில் - சில துணுக்குகள்)
நூல் விபரம்

பொத்தகப் பெயர்: தமிழர் சமய வரலாறு
ஆசிரியர்: பேரா .வேலுப்பிள்ளை
ஆசிரியரைப் பற்றியறிய - http://muelangovan.blogspot.in/2009/02/blog-post_28.html
 
கட்டுரை எண்: 3 - தமிழ் நாட்டிற் சமணர் -பக்கம்: 26-35

* இன்று காணப்படும் தமிழிலக்கியங்கலெல்லாம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தோன்றியவையே. இக்காலப் பகுதியில் ஆயிரமாண்டுகளுக்கு மேற்பட்ட காலம், தமிழ் நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தது. இலக்கிய வளமிக்க மொழி என்னும் அந்தஸ்தை தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். காலப் போக்கிலே சமணம் தாழ்வடைய சைவம் உயர் நிலையடைந்தது.

* தமிழ் மக்களிற் பெரும்பாலானோர் சைவராக மாறியதாலும், சமணம் தமிழ் நாட்டில் இல்லையென்னும் படியான நிலையை இன்றெய்தியிருப்பதாலும், சைவர் பிரசார இயக்கங்கள் நிலை பெற்று வாழ்வதாலும் சமணர் என்றதுமே ஞானமில்லாத, கையாலாகாத, திகம்பரத் துறவிகள் என்று பலர் கருதும் நிலை இன்றும் தமிழ் பேசும் உலகில் காணப்படுகின்றது. ஆனால், துவேஷ மனப்பான்மையை நீக்கி நடுநிலையுடன் தமிழிலக்கிய வரலாற்றை ஆராயும் எவரும், சமணர்கள் தமிழ் வளர்ச்சிக்குச் செய்த அளவு தொண்டு, இதுவரை வேறெச் சமயத்தவரும் செய்யவில்லை என்ற முடிவிற்கே வருவர்.

கட்டுரை எண்: 4 - தமிழில் அறநூல்கள் எழுந்த காலம் - பக்கம் 36-40
* பண்டைக்காலத் தமிழிலக்கியங்களில் ஒரு பகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு என்பன அறநூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள், திரிகடுகம், நான்மணிக்கடிகை என்பன இயற்றியோர் வைணவ மதத்தினர். ஆசாரக்கோவை நூலாசிரியர் சைவரெனக் கொள்வதற்கு இடமிருக்கிறது. ஏனைய அறநூல்கள் யாவும் சமண சமயத்தவரால் ஆக்கப்பட்டிருக்கின்றன.

* முச்சங்க வரலாறு என்று இறையனராகப் பொருளுரையிற் கூறப்பட்டிருப்பது கட்டுக் கதை. பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னும் தமிழ்நாட்டில் ஓங்கியிருந்த சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள், சமண பெளத்தங்களிலும் பார்க்கத் தங்கள் சமயத்திற்கு, ஏற்றமும் முதன்மையும் அளிப்பதற்காக சமண, பெளத்த சங்கங்கள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்பு முச் சங்ககளிருந்தன, சைவ சமயக் கடவுளரும் அங்கேயிருந்து தமிழ் வளர்த்தனர் என்றேல்லாம் கதைவிடத் தொடங்கினர் என்று அறிஞர் கே.என்.சிவராஜப்பிள்ளை கருதுவது பொருத்தம் போலக் காணப்படுகின்றது. சங்கம் என்ற சொல்லே சமண, பெளத்தருகுரியதன்றிச் சைவ, வைணவருக்குரியதல்ல. தமிழ் நாடு வரலாறு, இந்திய வரலாறு, மிகப் பழைய தமிழிலக்கியங்கள் முதலியவற்றை மரபின் பிடியிலிருந்து விலகி, வரலாற்றுணர்ச்சியுடன் நுணுகி ஆராய்ந்தால், தமிழ் நாட்டில் சங்க காலமெனக் குறிப்பிடத்தக்கது களப்பிரர் படையெடுப்புக்குப் பின்பும் பல்லவர் காலத்திற்கு முன்பும் இடையிலிருந்த சில நூற்றாண்டுகளே என்பது புலப்படும். சமண பெளத்த சங்கங்கள், அக்காலத்திற்போல, வேறெக் காலத்திலும் தமிழ் நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லையெனப் பெரிய புராணம் கூறும். சைவ சமய மறுமலர்ச்சியாலும் அப்பர் சம்பந்தர் பாடல்களில் சமண-பெளத்த பெறும் முக்கியத்துவத்தாலும், லோகவிபாகம் என்னும் பாளி நூலில்-கி.பி.470ல் வச்சிரநந்தியென்னும் சமண முனிவர் திராவிட சங்கம் மதுரையில் நிறுவியதாகக் கூறப்படுவதாலும் அறியலாம்.

இன்னும் வரும்....


இரா.பானுகுமார்,
சென்னை

5 comments:

Adhiraj said...

வணக்கம் அய்யா...
உங்கள் வலைபக்கத்தை கடந்த ஆறுமாதகாலத்திற்க்கு முன் தான் கண்டேன்....தமிழனதருமையை தனியாய் உண்ர்ந்த சமணர்களின் வழிவந்த இளைஞர்களில் நானும் ஒருவன் ,,,,திருக்குறளுக்கு தாங்கள் அளித்துள்ள விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன ஏற்கனவே பேரா,ஸ்ரீசந்திரன் அவர்களின் திருக்குறள் உரை விளக்கம்,காஞ்சிபுரம் தி.அனந்தநாத நயினார் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன சித்தாந்தமும் போன்ற நூகளும் அளித்த அடிப்படையாக கொண்டு மேலும் வளப்படுத்த காலம் சென்ற பேரா.ராவ்பகதூர் அ.சக்ரவர்த்திநயினார் அவர்க்ளின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பை தேடிக்கொண்டிருந்தேன் அதன் முன்னுரை மட்டும் கிடைத்தது அதை படித்து புரிந்துகொள்ளதற்க்குள் மண்டைகாய்ந்து விட்டது.பேராசிரியரின் ஆங்கில நடை பிரம்மிக்க வைத்தது.அந்த சமயம் தான் தங்கள் வலைதளம் கண்ணில் பட்டது.தங்களை தொடர்பு கொள்ள விழைகின்றேன்....தங்கள் தொலைபேசி அல்லது தொடர்பு முகவரி கிடைத்தால் சிறப்பாக இருக்கும்..... வணங்கிமகிழும் ....அன்பன் ஆதிராஜ்....

Adhiraj said...

வணக்கம் அய்யா...

Adhiraj said...

வணக்கம் அய்யா....
தங்கள் தளத்தை கடந்த ஆறுமாததிற்க்கு முன்பு கண்டேன் தாங்கள் பதிந்ததை படிப்பதிலே மூழ்கி இருந்தேன்...தமிழனதருமையை தனியாய் உணர்ந்த சமணர்களின் வழிவந்த தற்கால இளைஞர்களில் நானும் ஒருவன் ....ஏற்கன்வே தேவர் பெருமானின் குறளை சிறப்புற தரவுகளோடு நிறுவிக்காட்டிய காஞ்சிபுரம் தி.அனந்தநாத நயினார் அவ்ர்களின் திருக்குறளும் ஜைனசம்ய சித்தாந்தமும்,ஸ்ரீசந்திரன் அவர்களின் திருக்குறள் உரைவிளக்கம் போன்றவை எனக்குள் தாக்கதை ஏற்படுத்தின...அதன் விளைவு பேரா.அ.சகரவர்த்தி நயினாரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு தேடினேன். கிடைத்தது அந்த நூலின் முன்னுரை மட்டுமே அதை படித்ததும் தலைசுற்ற வைத்தது பேராசிரியரின் ஆங்கில நடையின் பிரம்மாண்டம்.....அந்த சம்யம் தங்களின் வளைதளம் கிடைக்க பெற்றேன்...எராளமான தரவுகள் எதிர்கருத்துக்களை சாதாரணமாக தகர்க்கும் சிந்தனை வளம் திருக்குறள் குறித்தும் நம் சமயம் குறித்தும் நிறைய கேட்க வேண்டும்... ....தங்கள் தொடர்பு முகவரி அல்லது செல்போன் எண் கொடுத்தால் உங்களை தொடர்பு கொண்டு பல விடயங்கள் பேச வேண்டும் .......வணக்கங்களுடன் ஆதிராஜ்,சேவூர்,அரணி.திருவண்ணாமலை மாவட்டம்.

Banukumar said...

அன்பின் ஆதிராஜ்,

வருக, வருக!

banukumar.r@gmail.com ல் தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண்ணைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இரா.பானுகுமார்,
சென்னை

சிவக்குமார் said...

உங்களது வலைப்பூவை பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறேன். தொடருங்கள் உங்களது மேன்மை மிகு பணியை